Wednesday, February 12, 2014

பள்ளிகளில்பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு
வழங்கப்பட்டு வரும் நிலையில், புதியசட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை
விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்களை தடுக்க, குடும்ப
வன்முறை பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு, பலாத்காரம் தடுப்பு, வாரிசு
உரிமை, விதவை மறுமணம், ஈவ் டீசிங், வன்கொடுமை, சொத்து உரிமை, ஜீவனாம்சம்
பெறும் உரிமை என, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான
பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கான
பாதுகாப்பு சட்டங்களில், கடுமையான தண்டனை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு
கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய, மாநில அரசு,
பாலியல் தொடர்பான சட்டங்களில், சில திருத்தங்களை கொண்டு வந்தன. அதன்படி,
நான்கு விதமான பாலியல் தாக்குதல் வகைகள், அந்த பாலியல் தாக்குதல், யாரால்
எல்லாம் ஏற்படுகிறது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய
சட்டவிதிமுறைகள் மற்றும் தண்டனைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன.
கடுமையான பாலியல் தாக்குதல் பிரிவில், போலீசார், ராணுவ வீரர், அரசு
ஊழியர், சிறைச்சாலை ஊழியர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்,
கல்வி நிறுவன ஊழியர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆறு
மாதம் முதல், ஆயுள் தண்டனை வரை, சிறை தண்டனை கிடைக்க, வழிவகை
செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகாரை, போலீஸ், சிறப்பு சிறார்
போலீஸ் யூனிட், பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ., குழந்தைகள் நலக்குழு,
குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். அதற்காக, "சைடு லைன் தொலைபேசி எண்:
1098' என்பதை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பாலியல்தொடர்பான
விழிப்புணர்வை பெற, பள்ளி மற்றும் கல்லூரிகளில், பாலியல் குற்றங்களில்
இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், 2012 மற்றும் குழந்தை
திருமணத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு, தமிழகத்தில் பள்ளி,
கல்லூரிகளில் வழங்கப்பட்டுவருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி கூறியதாவது: பள்ளிகள் அளவில்,
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி அளவில், பட்டபடிப்பு
மாணவ, மாணவியருக்கும், விழிப்புணர்வு கையேடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்
மூலம் வழங்கப்படும். அதில், பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, கடுமையான
பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, ஆபாச படம் எடுத்தல் தண்டனை, ஒரு முறைக்கு
மேல், அதே குற்றத்தை செய்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்,
குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட முறைகளில், ஆறு மாதம், ஐந்தாண்டு, ஏழாண்டு,
பத்தாண்டு, ஆயுள் தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கூறினார்.

No comments:

Post a Comment